தமிழ்நாட்டில் நவம்பர் முதல் வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று உறுதியான தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
அ.தி.மு.க. அமைச்சரவை அமைந்து இன்னும் ஆறு மாதங்கள் கூட முழுமை பெறவில்லை. அதற்குள் மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதாவது, இரண்டு மாதங்களுக்குள் மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடந்ததும், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. அதனால், அடுத்தக் கட்ட அமைச்சரவை மாற்றம் நடக்கவில்லை.
சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், உள்ளாட்சித் தேர்தல் வந்துவிட்டது. இதில் அ.தி.மு.க. தனித்து நின்று யாருமே எதிர்பாராத அளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் எங்காவது, கடுமையான தோல்வி கண்டிருந்தால், அம்மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்களை மாற்றலாம் என்றால், அதற்கும் வாய்ப்பில்லை.
ஆனாலும், கடந்த சட்டமன்றத்தொடரில் அமைச்சர்களின் பணி மற்றும் நடவடிக்கைகளை கண்டு, சில பேரை மாற்றியே தீர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தில், பதவியை இழக்கப் போகிறவர்கள் பட்டியலில் ஐந்து அல்லது ஆறு பேர் இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அதன்படி கோகுல இந்திரா, சண்முகவேலு, உதயகுமார், சண்முகநாதன் ஆகிய இவர்களுடன் இன்னும் சிலர் பதவி இழக்கலாம். அதே நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் விஜய் வேறு துறைக்கு மாற்றப்படலாம். தொழில்துறை அமைச்சராக இருக்கும் வேலுமணியும் வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த மாற்றங்கள் எல்லாம் நவம்பர் 3ம் தேதிக்கு பிறகு நடக்கும். ஏன், உடனே நடக்காதா என்று கேட்டால், அதற்கு கவர்னர் தேவையாயிற்றே என்று பதில் வருகிறது.
கவர்னர் ரோசய்யா, வரும் 30, 31 மற்றும் நவம்பர் 1ம் தேதிகளில் இந்திய கவர்னர் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த கவர்னர் மாநாட்டுக் குழு தலைவராக, இந்தியாவில் இருக்கும் கவர்னர்களில் மிக குறைந்த வயதுடைய ரோசய்யா தான் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய தகவல்.
அவர் மாநாட்டை முடித்துக் கொண்டு வந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும். புதிதாக அமைச்சர் பட்டியலில் இடம் பெறப் போகிறவர்கள் யார் என்பது, யாருக்குமே தெரியாது, முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர. யாரெல்லாம் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பதை வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.