நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 31, 2011

ஏடிஎம் கொள்ளையர்கள் - விழிபிதுங்கி மக்கள்



சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகளில் போலி டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் பணம் சூறையாடப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நவீன முறையில் நடந்து வரும் இந்த சைபர் குற்றச் செயலால் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் முக்கியத் தகவல்களை நூதன முறையில் திருடி அவற்றை வைத்து போலி கார்டுகள் தயாரித்து அவற்றின் மூலம் ஏடிஎம் மையங்களில், வாடிக்கையாளர்களின் பணத்தை அபகரித்து வருகிறது ஒரு கும்பல். இந்த திருட்டால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் அவற்றைப் பறி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிட்டத்தட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் போலி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது அதில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் (இவற்றில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் விவரங்களும் அடக்கம்) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இன்டர்போல் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு சென்னை போலீஸார் எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியுள்ளனர். போலி டெபிட், கிரெடிட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தைக் காக்குமாறு அந்த வங்கிகளை அறிவுறுத்துமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தினசரி சென்னை காவல்துறைக்கு இந்த ஏடிஎம் திருடர்களால் பணத்தைப் பறி கொடுத்து விட்டு பலரும் புகாருடன் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நெட்வொர்க்கில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களை வளைத்துப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை 150 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகார்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதால் ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பெருமளவில் நகரில் நடமாடுவதாக போலீஸார் அஞ்சுகிறார்கள். இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தக் கும்பலின் தலைவனாக செயல்படும் நபர் இன்னும் சிக்கவில்லை. அவனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன். சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு அனைத்து வங்கிகளையும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுக்க வருவோரை தீவிரமாக கண்காணிக்குமாறும், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மையங்களில் உடனடியாக அவற்றைப் பொருத்துமாறும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை

இயக்குனர் சேரன் தயாரித்து அமுதன் இயக்கிய தொடரும் நீதிக்கொலைகள்என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். 

அப்போது பேசிய சத்யராஜ், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வெளிவந்த பெரும்பாலான ஆங்கிலப் படங்கள்  அதை தழுவியே எடுக்கப்பட்டன. அதேபோல் இனி தமிழகத்தில் வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் ஈழ விடுதலையை சார்ந்ததாகவே இருக்கும்.
 
சினிமா வியாபாரம் சம்பந்தப்பட்டது. ஏன்னா போட்ட பணத்தை எடுக்கத்தான் எல்லாரும் நினைப்பாங்க. எந்த விஷயத்துக்காக மக்களின் கைதட்டல் அதிகமாக கிடைக்கிறதோ அது தான் அதிகமாக படத்தில் வரும். சில்க்கின் கவர்ச்சி நடனத்துக்கு கைதட்டல் கிடைத்தால், அந்த கவர்ச்சி நடனத்தை எல்லா படத்திலும் வைப்போம்.  கவுண்டமணி, செந்தில் காமெடிக்கு கைதட்டல் அதிகமாக கிடைத்தால்,

அதை எல்லா படத்திலும் வைப்போம். எதற்கு தியேட்டடில் மக்கள் கை தட்டுகிறார்களோ அதை நோக்கி சினிமாவின் பார்வை திரும்பும். இன்று ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி உள்ளது.

இப்போது வெடிஎன்ற படம் வெளியாகி இருக்கிறது. விஷால் அதில் நடித்திருக்கிறார். அது சராசரியான மசாலா படம் தான். அந்த படம் பற்றி உங்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், அதில் ஹீரோ விஷால், என் பெயர் பிரபாகரன், எனக்கு பயம்ன்னா என்னனு தெரியாது என்ற வசனத்தை பேசும் போது, தியேட்டர் இடிந்து போகிற மாதிரி கைத்தட்டல் கிடைத்திருக்கிறது.

அதேபோல சூர்யாவின் 7ஆம் அறிவுபடத்தில் ஈழம் விடுதலை சம்பந்தமான பல வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த வசனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுதான் தமிழர்களின் உணர்வு.

எல்லாரும் வீதியில் இறங்கி போராடும் நிலைமை இல்லை. அதற்கு அவர்களுடைய சூழல், குடும்ப சூழல் என பல பிரச்சனைகள் இருக்கிறது. எல்லாரும் போராட வீதிக்கு வரவில்லை என்பதற்காக தமிழர்களுக்கு உணர்வு இல்லை என்று அர்த்தமாகிவிடாது.

எனவே ஈழ விடுதலைக்கு மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு திரண்டு வருகிறது, எனவே ஈழ விடுதலை பற்றி மேலும் பல படங்கள் வெளிவரும் என்றார்.


ரேப் சீனுக்கு கூப்பிடுறாங்க

பாலியல் பலாத்கார காட்சிகள் நடிக்கத் தான் என்னை அதிகம் அழைக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் வருத்தப்படுகிறார்.

நடிகை ராக்கி சாவந்த் தனது நடிப்பை விட சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏதாவது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வார். சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ராக்கி வித்தியாசமாக ஒரு புலம்பலை வெளியிட்டுள்ளார். எனக்கு பலாத்கார காட்சிகளில் நடிக்கத் தான் வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க எனக்கு விருப்பமில்லை. என்னை ஏன் இப்படிபட்ட காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது என்று ராக்கி தெரிவித்துள்ளார். மேலும் கூடவே, ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனேவையும் வம்புக்கிழுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நான் ஆடும் பாடல்கள் ஆபாசமாக உள்ளது என்று தணிக்கை குழு நிராகரிக்கிறது. ஆனால் என் பாடல்களை விட ஆபாசமான 200 பாடல்களை என்னால் காட்ட முடியும்( எடுத்துக்காட்டாக ஜான் ஆபிகாம் மற்றும் தீபிகா படுகோனே பாடல்கள்). கான், கபூர், பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதற்காக தணிக்கைக் குழு என்னையே குறி வைக்கக் கூடாது.

இத்தனை நாட்களாக டிவியில் கவனம் செலுத்தினேன். தற்போது புதிய உதவியாளரை பணியமர்த்தியுள்ளேன். விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் தேஜாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

நம்புங்கள்... அரசுத் துறைகளில் லஞ்சம் கிடையாது

வரும் 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில், லஞ்ச எதிர்ப்பு வாரம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் மத்திய, மாநில அரசுப் பணிகளை லஞ்சம் கொடுக்காமல் முடிக்க முடியும் என, பல்வேறு தரப்பில் நம்புகின்றனர்.

உலகம் முழுவதும் ஊழல் பெருத்து விட்டது. ஊழல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த நாடு? எந்த துறை? கடைசியில் இருப்பது எந்த நாடு? எந்த துறை? என்று, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, பட்டியல் தயாரிக்கும் நிலை வந்துள்ளது.கடந்த ஆண்டில், 180 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வதேச ஆய்வின் படி, இந்தியா 87வது ஊழல் நாடாக உள்ளது. முதலிடத்தில், நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் நாடுகள் உள்ளன. முதலில், 110 வது இடத்தில் இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் படிப்படியாக ஊழல் நடவடிக்கைகளில் முன்னேறி, 87வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், வரும் 31ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க வேண்டுமென, மத்திய ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசின் துறை செயலர்கள், மாநில அரசு தலைமை செயலர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், மத்திய, மாநில அரசின் கல்வி மையங்கள், பணியாளர் தேர்வாணையங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்கள், அமைப்புகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மத்திய, மாநில அமைச்சரகங்கள், அனைத்து துறைகளின் தலைமை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:லஞ்சம் மற்றும் ஊழல் வாரம் குறித்த விழிப்புணர்வு தகவல்களை, அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில், பொதுமக்களின் பார்வையில் படும்படி, பேனர்கள் மற்றும் அறிவிப்புகளாக வைக்க வேண்டும். ஊழல் மற்றும் லஞ்ச எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இதுதொடர்பாக போட்டிகள் நடத்தி பரிசு தர வேண்டும்.ஊழல் எதிர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஊழல் எதிர்ப்பு குறித்து பிரபலமானவர்கள் அல்லது நிபுணர்களை கொண்டு, பிரசாரம் செய்ய வேண்டும். அக்டோபர் 31ம் தேதி, காலை 11 மணிக்கு, சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்க வேண்டும்.இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்து, அதன் பாசிட்டிவான அறிக்கைகளை, நவம்பர் 15ம் தேதிக்குள் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊழல் அதிகரிப்பதற்கு, லஞ்சம் கொடுத்து இளைஞர்கள் வேலைக்கு சேர்வதே முதல் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த காலங்களில், பெரிய அளவிலான ஊழல்களில், சில மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டுள்ளனர். அரசுத்துறைகளில் பணிகள் முடிவதற்கு பெரிய அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.இதற்கிடையில், வரும் வாரத்தில் ஊழல் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படும் நிலையில், மத்திய, மாநில அரசுத்துறைகளில், அலுவலக உதவியாளர், பாதுகாவலர் முதல் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள் வரை, யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், பணிகளை முறையாக முடிக்கலாம் என நம்புவோம்.

ஊழல் துறைகள்:லஞ்சம் கொடுத்து வேலைவாய்ப்பு, வரி ஏய்ப்பு, மாநில எல்லைகளில் பொருட்கள் கடத்தலுக்கு லஞ்சம், சான்றிதழ்கள் பெற லஞ்சம், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலஅபகரிப்பு மற்றும் ஆவண தயாரிப்புக்கு லஞ்சம், அரசுத்துறை டெண்டர் மற்றும் கான்ட்ராக்ட் பெற லஞ்சம், போலி மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவண ஊழல், வருமானவரி ஏய்ப்பு, சட்டவிரோதமாக கனிமங்கள் உட்பட இயற்கை வளங்களை சுரண்ட லஞ்சம், தரம் குறைந்த பொருட்களை விற்க லஞ்சம், போலியாக விசா, பாஸ்போர்ட் பெற லஞ்சம், போலீஸ் துறையில் வழக்குகளை முடிக்க லஞ்சம்...இப்படி நீண்டுகொண்டே போகும்.